சர்வீஸ் சென்டரை மாற்ற கோரி மதுரை கலெக்டர் பங்களாவை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகை
மதுரை:மதுரை காமராஜர் சாலை சிஎம்ஆர் ரோட்டில் ஏஏ பிரைவேட் தெரு உள்ளது. இங்கு ஒருவர் டூவீலர் வாட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் குளம் போல் தேங்குகிறது. இதனால், கழிவு நீரை தாண்டி வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், வாட்டர் சர்வீஸ் சென்டரை இடம் மாற்ற கோரி, முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்நிலையில் அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டார். கலெக்டர் மாறியதும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில், இதே பிரச்னைக்காக தற்போதைய கலெக்டர் சுப்பிரமணியனிடம், 10 நாட்களுக்கு முன்பு மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் இன்று அதிகாலை கலெக்டர் பங்களா நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், 23 பெண்களை குழந்தைகளுடன் போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் கலெக்டர் பங்களா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.