மனிதனாய் பிறந்தவனுக்கு இரக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அரக்கன்தான். இரக்கமே இல்லாமல் சிலர் நடந்து கொள்வதை பார்க்கும் போது, இவர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்றுதான் நினைக்கத் தோன்றும். சிலர் இன்னும் ஈவு இரக்கமே இல்லாமல்தான் நடந்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. உயிரே போனாலும் பரவாயில்லை என சுயநலத்தோடு செயல்படுகிறார்கள்.
ஆந்திர மாநிலம் பத்ராசலம் மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா. 25 வயது வாலிபர். இவர் மற்றும் இவரது சித்தப்பா, உறவினர்கள் 2 பேர் ஈரோட்டில் கூலி வேலை செய்வதற்காக பஸ்சில் புறப்பட்டுள்ளனர். அரசு பஸ் ஊத்தங்கரை பைபாஸ் ரோட்டில் சென்ற போது முன்னாவிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. பஸ்சிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்த கண்டக்டர், டிரைவர் ஆகியோர் அங்கேயே பஸ்சை நிறுத்தி முன்னா மற்றும் அவருடன் வந்தவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டனர். அருகே மருத்துவமனை உள்ள பகுதியில் நிறுத்துமாறு முன்னாவின் உறவினர்கள் கெஞ்சியுள்ளனர். ஆனால் டிரைவர், கண்டக்டர் அதை கேட்கவில்லை. வலிப்பு நிற்காத நிலையில் தவித்த அவர்கள் அங்குள்ள மரத்தடியில் படுக்க வைத்து முதலுதவி அளித்தனர். மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் முன்னா பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேரிடமும் பணம் இல்லாததால் ரோட்டோரம் சடலத்தை வைத்துக் கொண்டு தவித்தனர். அந்த வழியே சென்றவர்கள் ரூ.100, ரூ.50 என கொடுத்தனர். சுமார் ரூ.5 ஆயிரம் சேர்ந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திராவிற்கு உடலை கொண்டு சென்றனர்.
பசியோடு ஒருத்தர் இருக்கும்போது, அவரை பார்க்கவைத்து சாப்பிடுவதே அநாகரீகம். அப்படி இருக்கும்போது, ஒருவர் உயிருக்கு துடிக்கும்போது, அதைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் நடப்பது அரக்கத்தனம். கண்டக்டரும் டிரைவரும் கொஞ்சம் மனது வைத்திருந்தால் அந்த ஏழை வாலிபனை காப்பாற்றியிருக்க முடியும். காசில்லாதவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதையா? அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா? சொந்த ஊருக்கு திரும்பி செல்ல கூட காசில்லாத ஏழைகள் என்றால் அவ்வளவு இளப்பமா? செய்யும் பாவமும் புண்ணியமும் ஒருநாள் நமக்கே வந்துசேரும். அதனால்தான் புண்ணியத்தை தேடு என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை... இதுபோன்ற பாவத்தை செய்யாமல் இருந்தாலே போதும்.