பிலிபைன்ஸ்சில் சரக்கு கப்பல் மோதி பயணிகள் கப்பல் மூழ்கியது குழந்தை உள்பட 24 பேர் பலி
மணிலா: பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலி யானா ர்கள்.
பிலிப்பைன்சின் தென் பகுதியில் உள்ள நசிபிட் என்ற இடத்தில் இருந்து எம்வி தாமஸ் அகினாஸ் என்ற பயணிகள் கப்பல் நேற்று காலை புறப்பட்டது. இதில் கப்பல் ஊழியர்கள், பயணிகள் உள்பட 904 பேர் இருந்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று இரவு பயணிகள் கப்பல் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இதில் பயணிகள் கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த கேப்டன் உடனடியாக கப்பலை விட்டு தப்பி செல்லும்படி உத்தரவிட்டார். உயிர் காக்கும் ஜாக்கெட் அணிந்து கொண்டு பயணிகள் பலர் கடலில் குதித்தனர். 138 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் 30 நிமிடத்தில் கடலில் மூழ்கியது.
தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் படகுகளில் விரைந்து வந்தனர். கடலில் தத்தளித்த பயணிகளை மீட்டனர். இதில் 11 மாத குழந்தை உள்பட 525க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்ட பயணிகளை காணவில்லை. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தீவில் புயல், மோசமான வானிலை, சரியான பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடிக்கடி கப்பல் விபத்து நடக்கிறது. கடந்த 1987ல் டோனா பாஸ் என்ற கப்பல், எண்ணெய் கப்பல் மீது மோதி கடலில் மூழ்கியது. இதில் 4341 பேர் இறந்தனர். இது பிலிப்பைன்ஸ்சில் நடந்த மோசமான கடல் விபத்தாக கருதப்பட்டது. அதே போல் கடந்த 2008ல் எம்வி பிரின்சஸ் என்ற கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் 800 பேர் பலியானார்கள்.