சீனாவில் மனைவியை கொன்ற வழக்கில் 17 ஆண்டு சிறையில் இருந்த கணவன் திடீர் விடுதலை
பீஜிங்: சீனாவின் அனுய் பகுதியை சேர்ந்தவர் யூ யிங்ஷெங். இவர் கடந்த 1996ம் ஆண்டு மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் யூ யிங்ஷெங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யூ மற்றும் அவரது தந்தை இருவரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும், கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்த கடந்த மே மாதம் போலீசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் மனைவியை யூ கொலை செய்ததற்கான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அவரை ஐகோர்ட் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த யூ கடந்த செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டார்.
சீனாவில் பல்வேறு வழக்குகளில் தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. இந்நிலையில், தவறான தீர்ப்புகள் வெளிவருவதை தடுக்க சீன அரசு கடந்த செவ்வாய்க்கிழமைதான் புதிய நெறிமுறைகளை வெளியிட்டது. தவறான தீர்ப்பால் பாதிக்கப்பட்ட யூவும் அன்றுதான் விடுவிக்கப்பட்டார். இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.