முத்துப்பேட்டை அருகே நூலகத்தில் விஷம் குடித்து நூலகர் தற்கொலை மனைவிக்கு உருக்கமான கடிதம்
முத்துப்பேட்டை:நூலகத்தில் விஷம் குடித்து நூலகர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த அஞ்சுகண் கலுங்கு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றினார். மனைவி உஷா மற்றும் 2 குழந்தைகளுடன் நூலகத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்தார். உஷா ஊருக்கு சென்றுவிட்டு வந்த போது ரூ.10 ஆயிரத்தை தொலைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் மனைவியை அடித்து உதைத்துள்ளார். உஷா கோபித்து கொண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை அழைத்தும் வரவில்லை.
இந்நிலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு நூலகத்திலேயே நேற்று இறந்து கிடந்தார். நூலகத்துக்கு வந்த வாசகர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். சதீஷ்குமார் அவரது மனைவி மற்றும் ஊர் மக்களுக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
‘என்னை உதறிவிட்டாய். நன்றாக வாழ வாழ்த்துகள். நீ இல்லாத ஊரில் வாழ பிடிக்கவில்லை. எங்கோ போகிறேன். திரும்ப உயிருடன் வர மாட்டேன். நான் உனக்கு என்னவெல்லாம் செய்தேன் என்று உனக்கு தெரியும். உன் அம்மாவுக்கு தெரியாதல்லவா? இன்றைக்கில்லை. என்றாவது யோசிப்பாய்‘ என்று மனைவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.