2வது திருமணம் செய்து வாழ்ந்த தந்தை ஓட ஓட வெட்டி கொலை மகன் வெறிச்செயல்
சாத்தான்குளம்:வீட்டுக்கு வராமல் இருந்த தந்தையை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி மகனே கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு பகுதி சேர்ந்தவர் ரெங்கன் (48). இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு முத்துப்பாண்டி (20) உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பொத்தகாலன்விளை இந்திரா நகரை சேர்ந்த சுதா என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார் ரெங்கன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரெங்கன் முனைஞ்சிபட்டி பகுதியில் சுடலை மாடசாமி கோயில் கட்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வந்தார். மற்ற நாட்களில் கூலி வேலைக்கு சென்றார்.
சாத்தூரில் ஓட்டலில் வேலை செய்து வந்த ரெங்கன், சில நாட்களுக்கு முன்பு 2வது மனைவி வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் சாத்தான்குளம் பஸ் நிலையம் அருகே சுடலை மாடசாமி கோயிலில் தங்கினார். கோயிலில் நேற்று மாலை ரெங்கன் தூங்கி கொண்டிருந்த போது, பைக்கில் வந்த முதல் மனைவியின் மகன் முத்துப்பாண்டி (20) அரிவாளால் ரெங்கனை வெட்டினார். தப்பி ஓடிய அவரை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரெங்கன் இறந்தார்.
தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரியை சேர்ந்த ஒருவரை வெட்டி கொன்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். பின்னர் சுதாவை 2வது திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு அவர் முதல் மனைவி, குழந்தைகளை பார்க்க செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை மகனே வெட்டி கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.