பெண்களுக்கான ஹேன்ட்பால் போட்டி ஊத்துக்கோட்டையில் நடந்தது
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்ட ஹேன்ட்பால் சங்கம் சார்பில், பெண்களுக்கான ஹேன்ட்பால் போட்டி ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் நடந்தது.பந்தை பவுண்டரிக்கு வீசி எறியும் இந்த போட்டியில் மதுரை, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இறுதி போட்டியில் திருவள்ளூர், திருவண்ணாமலை அணிகள் மோதியது. இதில் திருவண்ணாமலை அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிப்பெற்ற அணிகளுக்கு நேற்று மாலை பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு ஹேன்ட்பால் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ராசமாணிக்கம், பேரூராட்சி தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ரமணா, மணிமாறன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திருவண்ணாமலை அணிக்கு பரிசு கோப்பை வழங்கினர். 2ம் இடம் பிடித்த திருவள்ளூர் அணி, 3ம் இடம் வந்த மதுரை, ஈரோடு ஆகிய அணிகளுக்கும் பரிசு வழங்கினர்.இதில் தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கட முனி உள்பட பலர் கலந்துகொண்டனர். உடற்பயிற்சி இயக்குனர் ஏழுமலை நன்றி கூறினார்.