மதுராந்தகம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரியாகும். சுமார் 1800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் மதுராந்தகம், அருங்குணம், முன்னூற்றி குப்பம், முள்ளி, வளர்பிறை, தாவாதூர், தேவாதூர் உள்ளிட்ட 18 கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம் ஏரியில் மொத்தம் 5 மதகுகள் உள்ளன. இவற்றின் மேல்புறம் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் ஏரிக்கரை பகுதிக்கு செல்பவர்கள் திறந்த நிலையில் உள்ள மதகுகளில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை போட்டு விடுகின்றனர். இதனால் அடைப்பு ஏற்பட்டு, பல நேரங்களில் தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்ய மதகுகளின் மேற்பகுதியில் இரும்பு கம்பிகளால் மூடுதளம் அமைக்க வேண்டும். நெடுங்காலமாக சீரமைக்கப்படாமல் உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் இந்த ஏரியில் பாசன கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுராந்தகம் நகரம் மற்றும் பல கிராமங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி ஏரிநீர் பாசன சங்க தலைவர் நாராயணன், மணி, மற்றும் அதன் உறுப்பினர்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே இருப்பதால், அரசு உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, ஏரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி விவசாயம் மேம்பட செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.