காதல் திருமணம் செய்த புதுப்பெண் காவிரியில் குதித்து தற்கொலை முயற்சி கணவனும் ஆற்றில் குதித்து மனைவியை மீட்டார்
திருவையாறு:தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பெரும்புலியூரை சேர்ந்தவர் சுதாகர்(28) லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா(24). இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கணவனும், மனைவியும் கோமளக்குடியில் உள்ள மஞ்சுளா வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை பெரும்புலியூர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருவையாறு பஸ் நிலையம் வந்ததும் சுதாகர், மனைவியை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வந்தார்.
கணவன் குடித்து விட்டு வந்ததை அறிந்த மஞ்சுளா கணவனிடம் தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மஞ்சுளா வேகமாக அருகில் உள்ள காவிரி பாலத்திற்கு சென்றார். கணவனும் பின்தொடர்ந்து போனார்.
திடீரென மஞ்சுளா பாலத்தின் மேற்கு பக்கமாக ஆற்றில் குதித்தார். இதை பார்த்த சுதாகர் பாலத்தின் கிழக்கு பக்கமாக குதித்து அருகில் உள்ள நடைபாலத்தின் இரும்பு கம்பியை பிடித்தவாறு நின்றார். அப்போது அந்த வழியாக வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மஞ்சுளாவை பிடித்துக்கொண்டார்.
பின்னர் கணவன், மனைவி இருவரும் கூச்சல்போட்டனர். பாலத்தின் வழியாக சென்ற மக்கள் இதைப்பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அதிகாரி சாமிநாதன் தலைமையில் வீரர்கள் வந்து கணவன், மனைவி இருவரையும் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் கணவன், மனைவி இருவரையும் திருவையாறு போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு எஸ்.எஸ்.ஐ. ராஜேந்திரன் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.