உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாரிஸ்:உலக அதிசயங்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். இது உலகிலேயே மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். மேலும் முழுக்க முழுக்க இரும்பால் அமைக்கப்பட்ட இந்த கோபுரம் உலக அதிசயங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகலில் மர்ம நபர்கள் சிலர், ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதறும். ஈபிள் டவர் தகர்ந்து போகும்Õ என்று போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்களும், போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். உடனடியாக சுற்றுலா பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈபிள் டவர் மூடப்பட்டது. சல்லடை போட்டு சுமார் 2 மணி நேரம் போலீசார் ஈபிள் டவரை சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை. வதந்தி என்று உறுதி செய்தனர். அதன்பின்ஈபிள் டவரை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 1889ம் ஆண்டு கட்டப்பட்ட ஈபிள் டவர் 1,062 அடி உயரம் கொண்டது. டவரில் ஏறி நகரின் அழகை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.