பாக்.கில் சவ ஊர்வலத்தில் பயங்கரம் : தற்கொலை படை தாக்குதலில் 38 பேர் உடல் சிதறி பலி
குவெட்டா: பாகிஸ்தானில் சவ ஊர்வலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 38 பேர் உடல் சிதறி பலியாகினர். ரம்ஜான் மாதம் தொடங்கியதில் இருந்தே பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் நோன்பு விருந்தை சீர் குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வந்தனர். இன்று ரம்ஜான் திருநாளுக்கான சிறப்பு பிரார்த்தனைகளும், தொழுகைகளும் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகர் அருகே சவ ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
நேற்று மாலை குவெட்டா போலீஸ் தலைமையகம் அருகே சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் ஊர்வலத்தில் சென்ற உள்ளூர் இமாமின் மகன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 38 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்த போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரம்ஜானுக்கு முந்தைய தினம் சவ ஊர்வலத்தில் நடைபெற்ற தாக்குதல் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.