லண்டன்: அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு ஆதரவாக புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. கருக்கலைப்பு செய்ய முடியாது என்று மருத்துவமனை ஒன்று கூறியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சவீதா ஹாலப்பா. அயர்லாந்தில் பல் டாக்டராக பணியாற்றினார். கர்ப்பிணியாக இருந்த சவீதாவுக்கு திடீரென கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் உள்ள கருவை அகற்றி அவரது உயிரை காப்பாற்றும்படி டாக்டரிடம் சவீதாவின் கணவர் வேண்டுகோள் விடுத்தார். கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில், கருவை கலைப்பது உயிர் கொலைக்கு சமமானது. அது சட்ட விரோதமானது என்று கூறி சவீதாவின் கருவை கலைக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில் சவீதா இறந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடந்ததால், அயர்லாந்து அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின், கருக்கலைப்புக்கு ஆதரவாக அயர்லாந்து நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் டப்ளினில் உள்ள மேட்டர் மருத்துவமனை கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இதுகுறித்து மேட்டர் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினர் பாதிரியார் கெவின் டோரன் கூறுகையில், கருக்கலைப்புக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்பட்டாலும், தார்மீக நெறிமுறைகளை மீறி எப்படி செய்ய முடியும். கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமம். இதை ஏற்க முடியாது என்றார். இதனால் அயர்லாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.