சிவகாசி:சிவகாசியில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தையை எழுப்பி கட்டையால் அடித்து மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது விநாயகர் காலனி. இங்கு வசிப்பவர் சந்திரசேகரன் (76). மனைவி வசந்தா தேவி (66). இவர்களுக்கு கலைச்செல்வி (42), ராஜேஸ்வரி(38) ஆகிய மகள்களும், பாலமுருகன் (40), சரவணன் (37) என்ற மகன்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி உள்ளூரில் வசித்து வருகின்றனர். சரவணன், பிஎஸ்சி படித்துள்ளார். கேட்டரிங் முடித்து ஓட்டல் வேலைக்கு சென்று வந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
பாலமுருகன், கடந்த 13 ஆண்டுக்கு முன்பு தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை காதலித்தார். கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வடமாநிலத்துக்குச் சென்று விட்டார். பாலமுருகன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு சரவணன் தான் காரணம் எனக் கூறி அண்ணன், தம்பி இருவர் மீதும் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விடுதலையான சரவணனுக்கு, அண்ணன் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என பெற்றோரிடம் கூறினார். சகோதரிகளுடனும் பேசுவதில்லை.
இதற்கிடையில், வடமாநிலத்தில் வசித்து வரும் பாலமுருகன் தனது பெற்றோருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினார். இதை சரவணனுக்கு தெரியாமல் அவர்கள் பீரோவில் மறைத்து வைத்திருந்தனர். இந்த கடிதத்தை எப்படியோ சரவணன் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். பெற்றோரின் இந்த செயலால் சரவணன் மனநிலை பாதிக்கப்பட்டார்.
நேற்று வழக்கம் போல ஓட்டல் வேலைக்குச் சென்ற சரவணன், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு வந்தார். தூங்கிக் கொண்டிருந்த பெற்றோரை எழுப்பி பாலமுருகனுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்து கேட்டு தகராறு செய்தார். திடீரென கட்டை, கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். பின்னர் சரவணன் சிவகாசி டவுன் போலீசில் சரணடைந்து தனது பெற்றோரை அடித்துக் கொன்றதாக கூறினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கொலைகாரன்‘கோல்டு மெடலிஸ்ட்‘தாய், தந்தையை கொலை செய்த சரவணன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். பிஎஸ்சி (தாவரவியல்) படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அதேபோல, கேட்டரிங் படிப்பிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.