ஜெர்மனியில் உலக ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டி நடந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 3&2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வரலாற்றில் ஜூனியர் பெண்கள் ஹாக்கியில் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இளம் நட்சத்திரங்கள் நேற்று டெல்லி திரும்பினர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீராங்கனைகள் பெரிய வசதி படைத்தவர்கள் அல்ல. ஏழ்மையிலும் தங்களது கடின உழைப்பால் இந்தியாவிற்கு சிறப்பை தேடி கொடுத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவிகள் செய்தால் நிச்சயம் இந்திய அணியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பது நிச்சயம். ஏழ்மையிலும் சாதனை படைத்த நட்சத்திரங்கள்:
ராணி ராம்பால்: அரியானா மாநிலத்தை சேர்ந்த இவருக்கு வயது 18. இவருடைய தந்தை தள்ளுவண்டி ஓட்டுபவர். உலககோப்பையில் இந்தியா வெண்கல பதக்கம் வெல்ல முக்கிய பங்கு ஆற்றியவர். தொடரில் 6 கோல்கள் அடித்து சிறந்த வீராங்கனை என்ற விருதையும் பெற்றிருக்கிறார். இவருடைய 2 சகோதரர்களில் ஒருவர் தச்சு வேலை செய்கிறார். மற்றொருவர் ஒர்க்ஷாப்பில் வேலை செய்கிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் ராணி ராம்பால் தனது பயிற்சிக்காக சைக்கிளில் சென்று வந்தார். பின்னர் முதுகுவலி ஏற்பட்டதையடுத்து ஒரு ஸ்கூட்டி வாங்கியுள்ளார். இதுவரை தனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை என்று கூறும் ராணி, அரியானா அரசு தனக்கு வேலை வழங்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அவ்வாறு கிடைத்தால் தங்கள் குடும்பம் சற்று பொருளாதாரத்தில் உயரும் என்கிறார்.
நவ்நீத்கவுர்: இவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். ராணியை போன்று இவரது குடும்பமும் ஏழ்மையே. இவரின் தந்தை ஒரு ஏ.சி. மெக்கானிக். இந்தியா பதக்கம் வெல்ல வெற்றி கோலை அடித்தவர் இவர். தற்போது இவர் எந்த வேலையிலும் இல்லை. யாரும் ஸ்பான்சரும் செய்யவில்லை. ஷாகாபாத்தில் உள்ள பயிற்சி மைதானத்திற்கு 2 கி.மீ. தூரம் நடந்தே செல்வார். அவரது தந்தை பூட்டாசிங் கூறுகையில், தனது மகளிடம் உண்மையிலேயே ஹாக்கி மீது அவ்வளவு ஆசையா என்று கேட்டேன். அவளும் கண்டிப்பாக சாதிப்பேன் என்று உறுதியுடன் கூறினாள். அவளுக்கு ஹாக்கி ஸ்டிக் மற்றும் காலணிகள் வாங்கி கொடுக்க என் வருமானம் போதவில்லை என்றார்.
வந்தனா கட்டாரியா: ராணி, நவ்நீத் குடும்பத்தைவிட வந்தனாவின் குடும்பம் கொஞ்சம் வசதி படைத்தது என்று சொல்லலாம். இவரது தந்தை நகர்சிங் ஹரித்துவாரில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்சில் டெக்னீசியனாக இருக்கிறார். தனது 3 குழந்தைகளும் ஹாக்கி மீது தீராத ஆசை வைத்துள்ளனர். நன்றாகவும் விளையாடுகின்றனர். ஆனால் இதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்கும் அளவிற்கு எனது வருமானம் போதவில்லை என கூறும் நகர்சிங் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு நான் அவர்களுக்கு எவ்வாறு உதவுவேன் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை என்றார்.