சென்னை:அடையாறு ஆற்றில் குழந்தையை வீசி விட்டு பெயின¢டர் தற்கொலைக்கு முயன்றார். தினகரன் நாளிதழ் ஊழியர் ஆற்றில் குதித்து குழந்தையை மீட்டார். ஈஞ்சம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் அகஸ்டின் (43), பெயின¢டர். இவரது மனைவி விமலா ராணி (39). தம்பதிகளுக்கு ரோசினி (9), ஜோஸ்வா (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அகஸ்டின் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையில் சிக்கி தவித்துள்ளார். வேலையும் இல்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை அடையாறு அருணாச்சலபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அகஸ்டின் குடும்பத்துடன் பஸ்சில் வந்தார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, குடும்பத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு புறப்பட்டார். மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நடந்தே வந்து கொண்டிருந்தார். அடையார் திரு.விக பாலம் அருகே வந்தபோது, திடீரென ரோசினியை தூக்கி அடையாறு ஆற்றில் வீசினார். கண் இமைக்கும் நேரத்தில் ஜோஸ்வாவையும் ஆற்றில் தூக்கி வீச முயன்றார். ஆனால், குழந்தை அகஸ்டினிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தது. மனைவியையும் தள்ள முயன்றார். அதற்குள் அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
உடனே அகஸ்டின் ஆற்றில் குதித்தார். அப்போது அந்த வழியாக வந்த தினகரன் நாளிதழில் பணியாற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர் தினேஷ் (26), சரவணன் என்ற மற்றொரு வாலிபர் ஆற்றில் குதித்தனர். அவர்கள் ரோசினியை மீட்டனர். தகவல் அறிந்து கிண்டி, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் வந்தனர். ரோசினி, தினேஷ், சரவணன் ஆகியோரை மீட்டனர். ரோசினி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தினேஷ், சரவணன் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆற்றில் குதித்த அகஸ்டினை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.அடையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.