மேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பும் நிலையில், வினாடிக்கு 1.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 கண் மதகு வழியாக உபரி நீர் இன்று காலை திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் இரு அணைகளுக்கும் வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 618 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 117.70 அடியை எட்டியது. அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக 24 ஆயிரத்து 612 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகு, இன்று காலை 8.20 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும், 12 மணிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 70ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், மேட்டூர் ஆர்டிஓ சந்திரன், சென்னை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், சேலம் கண்காணிப்பு பொறியாளர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். உபரி நீர் திறப்பால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் இன்று பிற்பகலில் அணை முழு கொள்ளளவை எட்டி விடும் என்றும், அதன்பிறகு அணைக்கு வரும் நீர் முழுமையாக 16 கண் மதகு வழியாக திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 36 ஆண்டுகள் அணை நிரம்பி உள்ளது. இன்று 37வது ஆண்டாக நிரம்புகிறது. 40வது முறையாக அணையின் 16 கண் மதகு வழியாக உபரி நீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டு அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 802 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. அணை வரலாற்றில் அதிக பட்சமாக 1961ம் ஆண்டு 3 லட்சத்து ஆயிரத்து 51 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் குளிக்க தடை:
காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்ல ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு அருகில் செல்லாதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.