திருச்சி:காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே மக்கள் குடும்பம் குடும்பமாக புனித நீராடினர். பெண்கள் புது தாலி மாற்றி, மாங்கல்ய பூஜை நடத்தினர்.
விவசாய பணிகளுக்கு ஜீவாதாரமாக விளங்கும் நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடி மாதம் 18&ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவிரி அடியெடுத்து வைக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்கக் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை இன்று அதிகாலையிலேயே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். பெரும்பாலானவர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், சிந்தாமணி அய்யாளம்மன், ஓடத்துறை படித்துறைகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் மக்கள் வரத்தொடங்கினர். பெண்கள் புனித நீராடி, படித்துறைகளில் வாழை இலையிட்டு அதில் காப்பரிசி, மஞ்சள் கயிறு, புதிய தாலி கயிறு, வாழைப்பழம், விளாம்பழம், நாவல் பழம், மாம்பழம், பேரிக்காய், வெற்றிலை பாக்கு, தேங்காய், பால், காதோலை கருகமணி ஆகிய மங்கல பொருட்களை வைத்து வழிபட்டனர். கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து காவிரித்தாயை வணங்கினர்.
புதுமண தம்பதிகள், முகூர்த்த மாலையை ஆற்றில் விட்டு வணங்கினர். திருமணமான பெண்கள், புதிய தாலி கயிறு மாற்றிக் கொண்டனர். இளம்பெண்களுக்கு பூஜையில் வைத்த மஞ்சள் கயிறு அணிவிக்கப்பட்டது. ஆண்கள் வலது கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். காவிரி கரையில் உள்ள வேப்பமரத்திலும் மஞ்சள் நூலை சுற்றிவிட்டு வணங்கினர். பூஜையில் வைத்திருந்த காப்பரிசியை(வெல்லம் கலந்த பச்சரிசி) ஒருவருக்கொருவர் கொடுத்து பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக காவிரி நதி கருதப்படுகிறது. இதனால், ஆடிப்பெருக்கின்போது காவிரிக்கு ரங்கநாதர் சீர்கொடுப்பது வழக்கம். இன்று காலை கோயிலில் இருந்து பட்டுப்புடவை, திருமாங்கல்யம், பழங்கள், பூ ஆகியவற்றை யானை மீது வைத்து மேளதாளத்துடன் அம்மா மண்டபம் எடுத்து வந்தனர். படித்துறையில் பூஜை செய்து, சீர்பொருட்களை நடுஆற்றில் கொண்டு போய் விட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டப படித்துறையிலும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இங்கு புனித நீராடிய பக்தர்கள், ஐயாறப்பர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் காவிரி நீர் வராததால் மக்கள் வீடுகளிலேயே புனித நீராடி பூஜை செய்தனர். பூம்புகாரில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நேற்றிரவே கோயிலுக்கு வந்து தங்கினர். இன்று காலை காவிரியில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். மேட்டூர் அணை பகுதியிலும் ஏராளமானோர் திரண்டு புனித நீராடினர்.அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆற்றங்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீரில் யாராவது மூழ்கினால் அவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.