கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே 6 யானைகள் முகாமிட்டு இருப்பதால் கிராம மக்கள் விடிய, விடிய தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். யானை பிளிறலை கேட்டு மிரண்டு ஓடிய அதிமுக தொண்டர் கிணற்றில் விழுந்து படுகாயமடைந்தார்.திருவண்ணாமலை வனப்பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வனப்பகுதிக்குள் புகுந்த 6 யானைகள் 2 வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலை, அரூர் வழியாக பவனி வந்த யானைகள் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தன.
இரவு முழுவதும் தகரை கிராமத்தைச் சேர்ந்த அத்தியப்பன் மகன் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தை நாசம் செய்தன. நேற்று காலை கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கல்லாநத்தம் அடிப்பெருமாள் கோயில் அருகே முகாமிட்டன. உண்ட களைப்பில் யானைகள் ‘ரெஸ்ட்’ எடுத்தன. இதை கண்ட வனத்துறையினர் யானைகளை விரட்டுவதை கைவிட்டனர்.
மாலையில் வழக்கம்போல் பயணத்தை துவங்கிய யானைகள், மீண்டும் மூர்த்தியின் கரும்பு காட்டுக்குள் புகுந்து, தின்று நாசப்படுத்தின. ஊருக்குள் யானைகள் புகுந்து விடுமோ? என பயந்த கிராம மக்கள் தூக்கம் இன்றி தவித்தனர்.நள்ளிரவில் முனியன் (50) என்பவரது தோட்டத்தில் நுழைந்து அரை ஏக்கர் வாழை, பாக்குமர தோப்பு ஆகியவற்றை துவம்சம் செய்தன. அருகிலிருந்த பெருமாள் நிலத்தில் புடலங்காய் பந்தலை நாசம் செய்தது. அப்போது அவ்வழியாக வந்த தகரை தெற்குதெருவைச் சேர்ந்த அதிமுக உறுப்பினராக கலியன் மகன் பாலமுருகன் (30) நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது யானைகள் பிளிறலை கேட்டு மிரண்ட பாலமுருகன் உயிர் பிழைக்க தப்பி ஓடினார். எதிர்பாராதவிதமாக தகரை முன்னாள் ஊராட்சி தலைவர் சோலைமுத்து என்பவரது நிலத்தில் தண்ணீர் இல்லாத 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
யானைகள் கூட்டம் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததும், மக்கள் கயிறு கட்டி அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.