திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல் நிறுவன தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க கவர்னர் ரோசய்யா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, பூனாட்சி, தலைமை செயலாளர் ஷீலா, டிஜிபி ராமானுஜம், கலெக்டர் ஜெயஸ்ரீ, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், குமார் எம்பி, மேயர் ஜெயா ஆகிய 10 பேருக்கு அனுமதி அளித்து பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருந்தது.
அவர்கள் அனைவரும் வரவேற்பு பாஸ் அணிந்து, கையில் பூங்கொத்து வைத்திருந்தனர். பிரதமர் வந்ததும் அவரை வரவேற்க 10 பேரும் சென்றனர். அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது, அனைவரும் முன்னால் சென்றுவிட, டிஜிபி ராமானுஜம், கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மட்டும் சற்று பின் தங்கிவிட்டனர். இவர்களுக்கான பூங்கொத்துகளையும் சிவப்பு பாஸ் அணிந்த போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். பிரதமரை வரவேற்க ஒவ்வொருவராக சோதனை செய்து அனுமதி அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரி (எஸ்.பி.ஜி) ஒருவர், சற்று பின்தங்கி வந்த டிஜிபியை திடீரென கையை நீட்டி வழிமறித்தார்.
பாஸ் இல்லாத நபர்கள் செல்ல கூடாது என கூறியுள்ளனர். உடனே அருகில் இருந்த கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் அதிர்ச்சி அடைந்து, Ôஇவர் தமிழக டிஜிபி என்று எஸ்பிஜி அதிகாரியிடம் கூறியுள்ளார். அதை அதிகாரி ஏற்கவில்லை. இதனால் டிஜிபி அங்கிருந்து விஐபி அறைக்கு சென்று விட்டார். தகவல் அறிந்த எஸ்பிஜி இயக்குனர் விரைந்து சென்று, டிஜிபி ராமானுஜத்தை சமாதானம் செய்ய முயன்றார். அதற்குள் வரவேற்பு முடிந்து பிரதமர் ஹெலிகாப்டரில் ஏறி திருமயம் புறப்பட்டார்.
அதேபோல் திருமயத்தில் இருந்து பிரதமர் திரும்பி வந்து, தனி விமானத்தில் மீண்டும் டெல்லி சென்றபோதும் அவரை வழியனுப்ப டிஜிபி ராமானுஜம் செல்லவில்லை.பிரதமர் விழாவில் புரோட்டாகால் அதிகாரியான தமிழக டிஜிபி ராமானுஜத்தை, எஸ்பிஜி குழு தடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் உண்மையில் நடந்தது என்ன, அந்த இடத்தில் டிஜிபிக்கு தடை விதித்த எஸ்பிஜி அதிகாரியிடம் விசாரித்து விளக்கம் அளிக்க எஸ்பிஜிக்கு பிரதமரின் அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல் தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டு தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக புரோட்டாகால் அதிகாரி அனு ஜார்ஜிடம் விசாரித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.