மயிலாடுதுறை:சிகிச்சை அளிக்க அலைக்கழித்ததால், வயிற்றுப்போக்கால் 3 வயது சிறுவன் இறந்ததாக கூறி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருவிளையாட்டம் குரும்பக்குடியை சேர்ந்தவர் கம்பராஜன்(41). இவரது மனைவி ஸ்ரீபிரபா (23). இவர்களது 2வது மகன் சபரீஷ் (3). நேற்றுமுன்தினம் இரவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, செம்பனார்கோயில் தனியார் மருத்துவமனையில் சபரீஷ் சேர்க்கப்பட்டான். மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்நோயாளிகள் பிரிவில் சேர்க்க சீட்டு வாங்கிய போது, குழந்தைகள் பிரிவுக்கு சிறுவனை கொண்டு செல்லும்படி ஊழியர்கள் கூறினர்.
குழந்தைகள் வார்டுக்கு சென்ற போது அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. பணியில் இருந்த நர்ஸ், பொது வார்டுக்கு செல்லும்படி கூறினார். ஒரு மணி நேரம் அலைக்கழித்த பிறகு, சிறுவனை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்துவிட்டதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையின் சடலத்தை பார்த்து கதறினர். மருத்துவமனை முன்பு சடலத்தை கிடத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 100 பேர் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
அப்போது ஒரு பிரிவினர் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஆர்டிஓ சிவப்பிரியா, தாசில்தார் கலைச்செல்வி, டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர், மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மருத்துவமனையின் முகப்பில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்தனர். குழந்தை இறந்த காரணம் குறித்து புகார் கொடுத்தால் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து குழந்தையின் சடலத்தை எடுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சோகம் நிலவியது.