மும்பை டான்ஸ் பார்கள் விவகாரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற முடிவு
மும்பை:மும்பையில் டான்ஸ் பார்கள் இயங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருப்பதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் புறநகர்களில் புற்றீசலாக பெருகி வந்த டான்ஸ் பார்களுக்கு மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டான்ஸ் பார் முதலாளிகளும், நடனப் பெண்கள் சங்கமும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து, டான்ஸ் பார்களுக்கு மாநில அரசு விதித்த தடை செல்லாது என அறிவித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி நடனப்பெண்களின் வாழ்வுரிமையை பறிக்க மகாராஷ்டிர அரசுக்கு அதிகாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. டான்ஸ் பார்களுக்கு மாநில அரசு விதித்த தடை செல்லாது என அறிவித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நடனப் பெண்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநில மேலவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதில் அளித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் பேசியது: மகாராஷ்டிராவில் மீண்டும் டான்ஸ் பார்ககள் இயங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும். தற்போதுள்ள சட்டங்களை கொண்டே டான்ஸ் பார்களுக்கு தடை விதிக்க முடியும். இருப்பினும் இந்த சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வகையில் புதிய அவசர சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு பாட்டீல் கூறினார்.