கடும் வெயிலால் பீதி சீனாவில் குடிநீர் பஞ்சம் ரேஷனில் வினியோகிக்க முடிவு
பீஜிங்: சீனாவின் பல பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை, அனல் காற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஷாங்காயில் வெப்பத்தின் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதத்தில் நிலவும் இந்த வெப்ப நிலை மற்றும் அதன் தாக்கம் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய மற்றும் கிழக்கு சீனாவின் 9 மாகாணங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் 50 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதை சமாளிக்க அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக குடிநீரை ரேஷனில் வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடும் வெப்பத்தால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வெயில் காரணமாக கடல்நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு டன் மீன்கள் இறக்கின்றன என்று ஷாங்காய் க்விங்பு மாகாணத்தில் உள்ள டபெங் மீன் பண்ணை இயக்குனர் லியு கெலின் தெரிவித்துள்ளார்.