விதிமுறை மீறி செயல்படும்போது, அது பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. தோட்டத்தில் பயிரைக் காக்க மின் வேலி போட்டிருக்கிறார்கள். காட்டு பன்றிகளுக்காக போடப்பட்ட மின் வேலியில் சிக்கி, வேலி போட்டவர்களே பலியாகி விட்டார்கள்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டினத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மருமகன் செல்லப்பாண்டியன். மாமனாருடன் சேர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார்.தேவிபட்டினம் ஊருக்கு மேற்கு பகுதி மலையடிவாரத்தில் அந்தோணிசாமிக்கும், செல்லப்பாண்டியனுக்கும் நிலங்கள் உள்ளன. இதில் கரும்பு, தென்னை, நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். நிலக்கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் தின்று துவம்சம் செய்வதால், வயலை சுற்றி மின் வேலி அமைத்திருந்தனர். இதில், இரவில் மட்டும் மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம். இரவு அந்தோணிசாமியும், செல்லப்பாண்டியனும் மோட்டார் அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். பலத்த காற்று வீசியதில், வேலியிலிருந்து மின் கம்பி கழன்று விழுந்தது. நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்த செல்லபாண்டியன் மின் கம்பியை மிதிக்கவே உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். மாமனாரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த அந்தோணிசாமி, அவரை தூக்குவதற்காக எழுந்து ஓடினார். அவரும் மின் கம்பியை மிதிக்கவே அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மறுநாள் காலை பக்கத்து வயல்களுக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள், இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் வேலி போடக் கூடாது என்பது விதி. ஆனால் காட்டு விலங்குகளை அச்சுறுத்தவும் பயிர்களை மேயாமல் தடுக்கவும் மின்வேலி போடுவது நடக்கிறது. காட்டு பன்றிகள், யானைகளுக்காக போடப்படும் மின்வேலியில் சிக்கி, மாடுகளும் மனிதர்களும் இறப்பது அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் மின் வேலி போட்டவர்களே மின்சாரம் பாய்ந்து இறந்து போகும் பரிதாபமும் நடக்கிறது. ஆனாலும் இரவு முழுவதும் விழித்திருந்து காவல் காப்பது என்பது முடியாத காரியம் என்பதால், எத்தனை பேர் பலியானாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் மின் வேலி அமைக்கிறார்கள் விவசாயிகள். இந்த அறியாமைக்கு கடைசியில் அவர்களே பலியாகி விடுகிறார்கள்.