மேற்கு வங்கத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கு 4 பேர் பலி
கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைக்கு 4 பேர் பலியானார்கள்.
மேற்கு வங்கத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலின்போது பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை. 2ம் கட்ட தேர்தலின்போது புர்த்வான் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட¢சி வேட்பாளரின் கணவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 3ம் கட்டமாக வடக்கு பர்கனாஸ், தெற்கு பர்கனாஸ், ஹவுரா ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.
தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் மீது மத்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உசைன் என்பவர் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சாரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் சனத் கோஷ் என்ற திரிணாமுல் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதர்பக்ஸ் மல்லிக் என்பவர் வெடிகுண்டு வீச்சில் காயமடைந்தார். தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் சோம்நாத் என்ற 16 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் குளத்தில் பிணமாக கிடந்தார். தேர்தல் வன்முறை காரணமாக இவர் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடும் வன்முறைக்கு மத்தியில் நேற்று 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.