கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. போதிய மருத்துவ வசதி இல்லாததால் குழந்தை இறந்து பிறந்தது.ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது தெங்குமரஹாடா கிராமம். நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட இக்கிராம மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மருத்துவ சிகிச்சைக்கு சத்தியமங்கலத்துக்கு வந்து செல்கின்றனர். வனப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் தினமும் ஒரு முறை பஸ் இயக்கப்படுகிறது. தெங்குமரஹடா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன். இவரது மனைவி வசந்தா (32). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கரடுமுரடான சாலையின் குறுக்கே 6 காட்டு யானைகள் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் மறித்து நின்றன. யானைகளை கண்ட டிரைவர் அருண்பாண்டியன் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சை 100 அடி தூரம் ரிவர்ஸ் எடுத்து நிறுத்தினார்.
யானைகள் வழி மறித்த விபரத்தை ஆம்புலன்ஸ் மருத்துவர் ஜார்ஜ் தினேஷ், தெங்குமரஹடாவில் உள்ள நஞ்சனுக்கு தெரிவித்து, வசந்தாவை வேறு வாகனத்தில் ஏற்றி வரும்படி கூறினார். ஒரு மணி நேரம் கழித்து யானைகள் சாலையை விட்டு நகர்ந்தபின் ஆம்புலன்ஸ் வேகமாக தெங்குமரஹடா நோக்கி விரைந்தது. கல்லாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே ஜீப்பில் வசந்தாவை அழைத்து வந்ததை கண்டனர். பிரசவ வலியால் துடித்த வசந்தாவை 108 ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவர் ஜார்ஜ் தினேஷ் பிரசவம் பார்த்தார்.
ஆனால், ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. வசந்தா கதறி அழுது மயங்கினார். பின்னர் சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரியான சாலை வசதி இல்லாததும் வனப்பகுதியில் யானைகள் ஆம்புலன்சை வழிமறித்ததும் குழந்தை இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தெங்குமரஹடாவில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்ப்பதற்கான மருத்துவ வசதி மற்றும் மருந்துகள் இல்லை. எனவே தெங்குமரஹடாவில் இவ்வசதிகளை ஏற்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.