சென்னையில் இணையதளம் மூலம் பாலியல் தொழில் 2 புரோக்கருக்கு குண்டாஸ்
சென்னை: இணையதளம் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இணையதளத்தில் விளம்பரம் செய்து சென்னையில் பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணில் வாடிக்கையாளர்போல் போலீசார் தொடர்புகொண்டனர். அதற்கு பெசன்ட் நகர் முதல் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். அங்கு சென்ற போலீசார் புரோக்கர்கள் ஜஸ்டின் என்ற ஜஸ்டின் முத்தையா (32), திருநெல்வேலியை சேர்ந்த கொம்பையா என்ற சிவா (25) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த கொல்கத்தாவை சேர்ந்த 2 இளம் பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் மீது பல வழக்குகள் இருந்தது. இதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.