லண்டன்: முதல் உலக போரின் போது, இங்கிலாந்து நாட்டுக்காக சண்டை போட்ட இந்திய வீரர்களை கவுரவிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அந்த வீரர்கள், அவர்களுடைய குடும்பங்கள் பற்றிய விவரங்கள் தந்து உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.ஜெர்மனிக்கு எதிரான முதல் உலக போரை கடந்த 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்து அறிவித்தது. அப்போது, போருக்கு தயாராகும்படி இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த போரில் பல இந்தியர்கள் உயிரிழந்தனர். அதன் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு, போரில் பங்கேற்று உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தை கவுரப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. முதல் உலக போரில் இங்கிலாந்துக்காக போரிட்ட உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தை அடையாளம் காண உதவி செய்யுங்கள்Õ என்று வெளியுறவு துறை அமைச்சகம் பகிரங்கமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த அமைச்சர் பரோனஸ் வர்சி கூறுகையில், முதல் உலக போரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களுடைய தியாகத்தால்தான் இப்போது இங்கிலாந்து சுதந்திரமாக உள்ளது. அந்த வீரர்களின் தியாகத்தை மறக்க விரும்பவில்லை. எனினும், அவர்களில் பல வீரர்கள் வரலாற்றில் பதிவாகாமல் போனது துரதிருஷ்டவசமானது. எனினும் அந்த வீரர்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை லண்டனுக்கு வரவழைத்து கவுரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதல் உலக போரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிராமங்களில் உள்ள வீரர்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள்Õ என்றார்.