கர்ப்பிணி மனைவியின் மருத்துவ செலவுக்காக கல்லூரி மாணவியிடம் செயின் பறித்தவர் கைது
திருத்தணி: கல்லூரி மாணவியிடம் செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணி மனைவியின் மருத்துவ செலவுக்கு வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.திருத்தணி அடுத்த நாபலூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பத்திரப்பதிவு எழுத்தராக இருக்கிறார். இவரது மகள் சுரேகா, அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து திரும்பிய சுரேகா, திருத்தணி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென ரேகா அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். திருத்தணி எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜய் (32) என்பவர்தான் செயின் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது, ‘‘என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டேன்’’ என்று விஜய் கூறியுள்ளார்.