வாஷிங்டன்: அமெரிக்காவில் குருத் வாராவுக்கு வெளியில் 82 வயது சீக்கியர் மீது சரமாரி தாக்குதல் நடந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள், அரேபியர்கள் பீதி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்துக்கள், அரேபியர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் மீது வெறுப்பு கொண்டு அமெரிக்கர்கள் சிலர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியா சென்ட்ரல் வேலி பகுதியில் உள்ள பிரஸ்னோ என்ற நகரில், 82 வயது சீக்கியர் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்னோ பகுதியில் சீக்கியர்களும் பஞ்சாபியர்களும் கணிசமான எண்ணிக்கை வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பியாரா சிங் (82) என்பவர் சில நாட்களுக்கு முன்னர் குருத்வாராவுக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்த மர்ம ஆசாமி, பியாரா மீது வெறுப்பு கொண்டு திடீரென இரும்பு ராடால் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் சரிந்த பியாராவை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் பியாராவுக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் சீக்கியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீக்கியர்கள் மீதான வெறுப்பில் இந்த தாக்குதல் நடந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் மட்டுமல்லாமல், அரேபியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், தாக்குதல் ஈடுபட்டதாக கில்பர்ட் கார்சியா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், எப்பிஐ அதிகாரிகள் மற்றும் போலீசார், சீக்கிய தலைவர்களை சந்தித்து அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். எனினும், சீக்கியர்கள் பீதியில் உள்ளனர்.