ஊட்டி: நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளனர். கோத்தகிரியில் கடந்த 4, 5 ஆகிய தினங்களில் காய்கறி கண்காட்சி நடந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்தனர். கூடலூர் செயின்ட் தாமஸ் பள்ளி மைதானத்தில் நேற்று வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது. கிராம்பு, குறுமிளகு உள்பட 14 வகை வாசனை திரவிய பொருட்களைப் பயன்படுத்தி 75 கிலோ எடையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடக்கிறது. இதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கண்காட்சி தினங்களில் அனைத்து பாத்திகளிலும் உள்ள மலர்கள் பூத்துக் குலுங்கும். தலைமை செயலகம் உள்பட பல்வேறு வகை மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பராமரிப்பு பணிக்காகவும், மேடைகள் அமைக்கவும் நேற்று முதல் பெரிய புல் மைதானத்துக்குள் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோஜா பூங்காவில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. மலர் அலங்கார போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களை தோட்டக்கலைத் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 25, 26 ஆகிய தேதிகளில் பழக் கண்காட்சி நடக்கிறது.