ரோந்து கார் மீது லாரி மோதல் எஸ்ஐ, கான்ஸ்டபிள் நசுங்கி பலி
உடுமலை: உடுமலை அருகே நள்ளிரவில் போலீஸ் ரோந்து வாகனம் மீது போர்வெல் லாரி மோதி சிறப்பு எஸ்ஐ, கான்ஸ்டபிள் அதே இடத்தில் பலியாயினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக இருப்பவர் சண்முக சுந்தரம் (50). உடுமலை அண்ணாகுடியிருப்பு சிவலிங்கம்பிள்ளை லேஅவுட்டில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். நேற்று சண்முக சுந்தரத்துக்கு ரோந்து பணி ஒதுக்கப்பட்டது.
காலை 8 மணி முதல் உடுமலை & பல்லடம் ரோட்டில் ஏரிப்பாளையத்தில் இருந்து வாவிபாளையம் வரை ரோந்து காரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். காரை குமரலிங்கம் காவல் நிலைய கான்ஸ்டபிள் தன்னாசி (37) ஓட்டினார். நள்ளிரவு 11.50 மணிக்கு குடிமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தில் சென்றபோது, எதிரே வந்த போர்வெல் லாரி காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ரோந்து வாகனம் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கி சண்முகசுந்தரமும், தன்னாசியும் அதே இடத்தில் பலியாயினர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் கதிர்வேல் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். ரோந்து கார் நசுங்கி இருந்ததால் சடலங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரது உடலுக்கும் போலீசார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இன்று மாலை உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய லாரி டிரைவர் கதிர்வேலை தேடி வருகின்றனர்.