மாதவரத்தில் இன்று காலை சோகம் கேஸ் கசிவால் வீடு தீப்பிடித்தது தம்பதி, மகன் உடல் கருகி சீரியஸ்
திருவொற்றியூர்: கேஸ் கசிவால் வீடு தீப்பிடித்ததில் கணவன், மனைவி, மகன் ஆகியோர் தீயில் கருகி உயிருக்கு போராடி வருகிறார்கள். மாதவரத்தில் இன்று காலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பரசுராமன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55). தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (46). இவர்களது மகன் நாகராஜன் (25), கார்பென்டர்.
வீட்டில் சமையல், படுக்கை அறை அருகருகே உள்ளது. இன்று காலை 7 மணியளவில் சரஸ்வதி எழுந்ததும் டீ போட சமையல் அறைக்கு சென்று கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ் டியூப்பில் கசிவு ஏற்பட்டு, சமையல் அறையில் தீப்படித்தது. சரஸ்வதி சேலையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அவர் அலறினார். சமையல் அறையில் பற்றிய தீ பக்கத்து அறைக்கும் பரவி வீடு முழுவதும் எரிய ஆரம்பித்து. சரஸ்வதியின் அலறல் கேட்டு ஓடிவந்த ராதா கிருஷ்ணன், நாகராஜ் ஆடையிலும் தீப்பிடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்தனர். மூவரையும் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
படுகாயம் அடைந்த மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதவரம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். சிலிண்டரை நேற்றிரவு மூடாத காரணத்தால் கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.