மதுரை: தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர். மதுரையில் 2 இடங்களில் மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பருவமழை பொய்த்ததால், சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களையும் வறட்சி பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. அதன்படி, வறட்சி பாதிப்பை ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். அங்கிருந்து 2 பிரிவாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய குழு தலைவர் பிரவேஸ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திராஜ் ககாடியா, குடிநீர் வடிகால் அமைச்சக துணை ஆலோசகர் பாலசுப்ரமணியன், வேளாண் துறை உதவி ஆணையர் கண்ணா மற்றும் உணவு வழங்கல் துறை உறுப்பினர் செயலர் ஒருவர் என 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் ஆய்வு நடத்துகின்றனர்.
மதுரையில் வைகை ஆற்றை இன்று காலை குருவிக்காரன்சாலை பாலம் அருகில் இருந்து குழுவினர் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம் சென்ற குழுவினர் ஆலங்குளம், உத்திகுளம் கிராமங்களில் வறண்டு கிடக்கும் கண்மாய்கள், செம்பனூரில் கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். இன்று மதியம் ராமநாதபுரத்தில் ஆய்வு செய்கின்றனர். பின்னர் திருவாடானை அருகேயுள்ள சோளந்தூர், கடலாடி அருகே சின்ன எரவாடி, எஸ்.தாரைக்குடி வேலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், திட்ட பணிகளையும் மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். பின்னர் தூத்துக்குடியில் இரவு தங்கி நாளை ஆய்வு செய்கின்றனர்.
மக்கள் முற்றுகை :
மதுரை & சிவகங்கை சாலையில் ரிங்ரோடு அருகேயுள்ள கதிர் நகரை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 150 பேர் காலி குடங்களுடன் மத்திய குழுவினரை வழிமறித்து முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வந்து 2 வாரமாகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இங்கு உப்பு தண்ணீரும் கிடைப்பதில்லை என்று முறையிட்டனர். மத்திய குழு தலைவர் பிரவேஸ் சர்மா, காரில் இருந்து இறங்கி வந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல் ஒத்தக்கடை பகுதி மக்களும் ஊராட்சி அலுவலகம் அருகே மத்திய குழுவினரை வழிமறித்து முற்றுகையிட்டனர். இந்த பகுதியில் குடிதண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்டாவில் ஆய்வு:
காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய திட்ட குழு வேளாண் பிரிவு துணை ஆலோசகர் மனீஷ் சவுத்ரி தலைமையிலான குழுவினர் நேற்று திருச்சி வந்தனர். இக்குழுவில், மத்திய நிதித்துறை துணை செயலர் ஸ்ரீகாந்த், புகையிலை மேம்பாட்டு வாரிய துணை இயக்குனர் மனோகரன், மின்துறை துணை செயலர் ஜோஸ், தென்னக நதிகள் ஆணைய கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் இன்று காலை திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சி சென்றனர். அங்கு உழவர் பெருமன்றம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் கீழமுல்லைக்குடி சென்ற குழுவினர், அங்கு கருகி போன வாழை பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் வேங்கூரில் ஆய்வு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்து இருந்ததை பார்த்தனர். நெல் வயல்கள் காய்ந்த நிலையிலும், தென்னை மரங்கள் கருகிய நிலையிலும் இருப்பதை பார்த்து அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். இதேபோல் ஆலக்குடி கிராமம், ராயத்தூர், சித்திரக்குடி போன்ற பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். எல்லா இடங்களிலும் வறட்சியால் எவ்வளவு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது என கணக்கிட்டனர்.
அப்போது, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் கிணற்று பாசனமும் இல்லை. செடி, கொடிகள் மட்டுமல்லாமல் மரங்கள் கூட காய்ந்து விட்டன. கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைக்கவில்லை. நிலம் காய்ந்து கிடப்பதால், புல் பூண்டு இல்லாமல், ஆடு மாடுகளை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர். பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றனர்.
இரண்டு நாட்கள் ஆய்வு முடித்த பிறகு 2 குழுவினரும் 8ம் தேதி இரவு சென்னை திரும்புகின்றனர். பின்னர் 9ம் தேதி காலை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் அன்று மாலை டெல்லி செல்கின்றனர். தமிழகத்தின் வறட்சி நிலைமை குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கான வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.