சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் விதி 110&ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும் வேளாண் சார் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு, அவற்றின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மொத்த மதிப்பில் 15 சதவீதம் என்ற அளவில் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் இனி 25 சதவீதமாக அதிகரித்து வழங்கப்படும். வழங்கப்படும் மானியத்தின் உச்ச வரம்பு 30 லட்சம் ரூபாய் என இருக்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழிற் பேட்டைகளை அமைக்கும் பொருட்டு, 2000 ஏக்கர் பரப்பிலான நில வங்கி படிப்படியாக உருவாக்கப்படும். சிறு தொழில் முனைவோர் விரைவாக தொழில் துவங்கும் வகையில், 5,000 சதுர அடிக்கு மேற்பட்ட தொழிற் கூடங்களை ஒதுக்கீடு செய்ய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, 50 சென்ட் வரையிலான தொழிற் கூடங்களை ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நடைமுறையில் உள்ள நில விலை நிர்ணய முறையை மாற்றி அமைத்து லாப நோக்கமற்ற விலை நிர்ணயக் கொள்கை உருவாக்கப்படும். புதிய தொழிற் பேட்டைகளை அமைக்க ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒற்றைச் சாளர தீர்வுக் குழு, ஒன்று ஏற்படுத்தப்படும்.
சென்னைப் பெருநகரை ஒட்டியுள்ள பகுதிகளில், நிலத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருவதாலும், தொழிற் பேட்டைகள் துவங்க போதுமான காலி இடங்கள் இல்லாததாலும், சிறு தொழில் முனைவோர், தொழிற் கூடங்களை அமைக்க உதவும் வகையில், அடுக்கு மாடி தொழில் வளாகங்களை, அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் சிறு தொழில் முனைவோருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் குறுந்தொழில் கூடங்களை ஒதுக்கும் பொருட்டு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும்.
தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன் வந்தால், சிட்கோ நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 சதவீதம் வரை மூலதனத்தை செலுத்தி புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்கும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.