மேற்கு வங்க சீட்டு கம்பெனி ஊழல் திரிணாமுல் எம்.பி. மீது 2வது எப்ஐஆர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக கூறப்படும் சாரதா சிட் பண்ட் நிறுவன ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. குனால் கோஷ் மீது 2வது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் கடந்த வாரம் திவாலானது. இதில் முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சிட் பண்ட் அதிபர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. சிட் பண்டில் பணம் போட்டு ஏமாந்தவர்களில் இதுவரை 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சாரதா குழுமத்தில் மீடியா பிரிவு தலைவராக திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.பி. குனால் கோஷ் செயல்பட்டு வந்தார். கடந்த வாரம் இந்த குழுமத்துக்கு சொந்தமான சேனல் 10 என்ற டிவி நிறுவனத்தின் ஊழியர்கள் 21 பேர் தங்களுக்கு 3 மாதமாக சம்பளம் வரவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் திரிணாமுல் எம்.பி. மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். வழக்கு விசாரணையை சந்திக்க தயார் எனவும், மம்தா உத்தரவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் கோஷ் அறிவித்தார்.
இந்நிலையில் சாரதா குழுமத்தை சேர்ந்த சாகல்பெலா எனும் தினசரி பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று குனால் கோஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். கடந்த 4 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை என புகாரில் கூறியுள்ளனர். இதன் அடிப்பைடயில் குனால் கோஷ் மீது போலீசார் 2வது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.