காதல் அனைத்தும் கைகூடுவதில்லை. 50 சதவீத காதல்தான் விரும்பியபடி திருமணத்தில் முடிகிறது. பாதி காதல் தோல்வியில்தான் முடிகிறது. காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் சாக முடிவு செய்தால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இளைஞர்களில் பாதிப்பேர் இருக்க மாட்டார்கள். ஏமாற்றத்தை ஜீரணித்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. இது பலருக்குத் தெரிவதில்லை. விரும்பியது கிடைக்காவிட்டால் எதற்கு வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகுல். சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். ஜீவா என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துள்ளார். ஜீவா பெங்களூரில் உள்ள கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர். 2 மாதம் முன்பு பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை வந்தார் ஜீவா. அவரை சந்தித்த ராகுல், ‘உன்னை பிடிக்கவில்லை. உன்னுடன் பேசாமல் இருக்கும்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். பெங்களூர் சென்றுவிடு என கூறியதாக தெரிகிறது. இதை எதிர்பார்க்காத ஜீவா அதிர்ச்சி அடைந்தார். ‘‘உடைகள் அழுக்காக உள்ளது. உன் வீட்டில் உடை மாற்றிவிட்டு சென்றுவிடுகிறேன் என்றார். ராகுல் தனது அறைக்கு அழைத்து சென்றார்.
நண்பர்களை வெளியே அனுப்பிவிட்டு ஜீவா மட்டும் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டார். திடீரென அறையில் இருந்து கரும்புகை வந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றனர். உடல் கருகிய நிலையில், ஜீவா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதற்குள் பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில் ஜீவா ஏற்கனவே தனது கைப்பையில் பெட்ரோல் கொண்டு வந்ததும் அதை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஜீவாவை ஐந்து வருடமாக காதலித்து வந்த ராகுல், திடீரென அவரை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இது ஜீவாவுக்கு தெரியவந்தபோது ராகுலிடம் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை காரணமாகத்தான் அவர் தீக்குளித்து இறந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரும்பியவனை கைவிடக் கூடாது. ஆனால் நம்மை கைவிட்டு இன்னொருவரை விரும்பும் ஆளை நாமும் மறந்துவிட வேண்டும். கிட்டாதாயின் வெட்டென மற என்பது பழமொழி. வெறுப்பவரை நினைத்து உயிரை விடுவது முட்டாள்தனம்.