பெங்களூர்: கர்நாடகத்தில் சோனியா காந்தி இன்று தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் பேசுகிறார். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் மே 3ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. ஆளுங்கட்சியான பாஜ, காங், மஜத, கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. இந்த நான்கு முனை போட்டிக்கு இடையே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளன. வாக்குப்பதிவு நடக்க இன்னும் 7 நாட்களே உள்ளதால் கர்நாடகத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று 2வது கட்டமாக ஆவேரி உள்பட 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார். காலை 11 மணி முதல் மாலை 2 வரை சிக்மகளூர், மங்களூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் பொது கூட்டத்தில் சோனியா பேசுகிறார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜ மூத்த தலைவருமான சுஷ்மாசுராஜ் இன்று பெல்காம் மாவட்டத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் பொதுகூட்டங்களில் பேசுகிறார். முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தனது சொந்த மாவட்டமான ஹூப்ளியில் பிரசாரம் செய்து வருகிறார். அதே போல மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பாதல், பிஜாபூர் ஆகிய மாவட்டங்களிலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா பழைய மைசூரிலும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிமோகோ மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதால் போலீசார் பாதுகாப்பை தீவிரமாக்கியுள்ளனர். முக்கிய சாலை சந்திப்புகள், பதற்றமான தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கவும், கையும் களவுமாக பிடிக்கவும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ரோந்து வருகின்றனர்.