வேளச்சேரி:காரில் மயங்கி கிடந்த டிரைவர் மர்மமாக இறந்தார். மேடவாக்கத்தில் இன்று காலை நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேளச்சேரி அருகே மேடவாக்கம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல் அருகே இன்று காலை நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காரின் அருகே சென்று பார்த்தனர். அங்கு மயங்கிய நிலையில் சீட்டில் டிரைவர் கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை, எஸ்ஐக்கள் சசிகலா, பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கார் கதவை திறந்து பார்த்தபோது டிரைவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்தது. காரின் முன் பகுதியில் மது பாட்டில் இருந்தது.
இறந்த டிரைவர் பன்னீர் செல்வம் (45), கொட்டிவாக்கம் சுப்பிரமணிய சாலையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. டிராவல்ஸ் காரில் மேடவாக்கத்திற்கு சவாரி ஏற்றி வந்ததும், இன்று அதிகாலை 4 மணியளவில் காரை ஓட்டல் அருகே நிறுத்தி விட்டு மது குடித்து விட்டு தூங்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இறந்த பன்னீர்செல்வம் மதுவில் விஷம் கலந்து குடித்தாரா அல்லது வேறு காரணமா என்று விசாரணை நடக்கிறது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பன்னீர்செல்வத்திற்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.