60வது பிறந்த நாள் விழா உற்சாக கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி, அன்பழகன் வாழ்த்து
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 60வது பிறந்தநாளை மணிவிழாவாக இன்று கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்களின் வாழ்த்துக்களை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டா லினுக்கு இன்று 60வது பிறந்தநாள். இது மணி விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள ஓட்டலில் இன்று காலை 7 மணிக்கு மணி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். கருணாநிதி மாலை எடுத்து கொடுக்க, ஸ்டாலினும் அவரது மனைவி துர்காவும் மாலை மாற்றிக் கொண்டனர்.
மணி விழாவில் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், முரசொலி செல்வம், செல்வி செல்வம், அமிர்தம், சொர்ணம், மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி., கலாநிதி மாறன், தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், அறிவுநிதி, குணாநிதி, காவேரி கலாநிதி, அருள்நிதி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிஆர்.பாலு எம்,பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோரும் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, காலை 9.30 மணிக்கு மெரினா கடற்கரைக்கு சென்ற ஸ்டாலின், அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினார்.
பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றார். அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்துக்கு ஸ்டாலின் வந்தார். அங்கு அவரை ஜெ.அன்பழகன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தென்சென்னை மாவட்ட திமுக ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கேக்கை ஸ்டாலின் வெட்டினார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று, ஸ்டாலினுக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, எஸ்றா சற்குணம், மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், காந்தி செல்வன், திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், தங்கம் தென்னரசு, சுந்தரம், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கே.பி.பி.சாமி, கீதா ஜீவன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கே.கே.நகர் பகுதி செயலாளர் தனசேகரன், சக்கரபாணி, முத்துராமலிங்கம், ஆர்.எஸ்.ராஜலிங்கம், வி.பி.ராமநாதன், கம்பம் ராம கிருஷ்ணன், செங்கை சிவம், பெ.வீ.கல்யாண சுந்தரம், பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி, சந்திரசேகர், குருசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், வீரப்பன், வி.பி.மணி, பூச்சி முருகன், அலெக்சாண்டர், எஸ்.வி. ரவிச்சந்திரன், மதன்மோகன், ஓஎம்ஆர் க.ஏகாம்பரம், ஈசா (எ) லிங்கேஸ்வரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் நிதி வழங்கினர்.