விஸ்வரூபம் பட வழக்கு ஐகோர்ட்டில் முடிவுக்கு வந்தது
சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று முடிவுக்கு வந்தது. கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல்ஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து, தமிழக அரசின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு, ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச்சில் அப்பீல் செய்தது. இதை தற்காலிக தலைமை நீதிபதி எலிபி தர்மராவ் விசாரித்து, தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தார்.
இதற்கிடையில் இந்த பிரச்னை தொடர்பாக அரசு உள்துறை செயலாளர், கமல்ஹாசன் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. படத்துக்கு விதிக்கப்பட்ட 144 தடையை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. இந்நிலையில் விஸ்வரூபம் பட வழக்கு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, விஸ்வரூபம் பட சிக்கல் தீர்ந்தது என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிகிறது.