சென்னை: ‘விஸ்வரூபம்’ படம் இந்தியில் நாளை ரிலீஸ் ஆகிறது. அதற்கான வேலைகளை கவனிக்க கமல்ஹாசன் இன்று காலை மும்பை புறப்பட்டு சென்றார். அப்போது நிருபர்களிடம் பேசிய கமல், ‘என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை’ என்றார். கமல் நடித்து, இயக்கிய படம் ‘விஸ்வரூபம்’. தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி உள்ளது. கடந்த 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. சில முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் படம் வெளியானது.
இதற்கிடையே, அரசின் தடையை எதிர்த்து கமல் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன், தடையை ரத்து செய்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். தமிழக அரசு சார்பில் நேற்று காலை அவசரமாக அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் வரும் 6-ம் தேதி வரை படத்துக்கு தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார். இந்நிலையில், வட இந்தியாவில் ‘விஸ்வரூபம்’ படம் இந்தியில் நாளை ரிலீஸ் ஆகிறது.
அதற்கான பணிகளை கவனிப்பதற்காக கமல்ஹாசன் இன்று காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: விஸ்வரூபம் படம் மும்பையில் வெளியிடப்படுகிறது. எனவே, நான் அவசரமாக மும்பை புறப்பட்டு செல்கிறேன். என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. தமிழக அரசு மீது இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு எனக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க நான் விரும்பவில்லை. இவ்வாறு கமலஹாசன் கூறினார்.