அரசியல் தெரியாமல் தேர்தலில் நிற்கும் இளைஞன் கதை
அரசியல்பற்றி ஒன்றும் தெரியாமல் தூண்டுதலின் பேரில் தேர்தலில் நிற்கும் இளைஞன் கதை ‘ஊராட்சி ஒன்றியம்Õ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கதை. உள்ளூர் அரசியல் என்பதில் பெரிய அளவில் குத்து, வெட்டு இருக்காது. ஆனால் கூட இருந்தே குழிபறிக்கும் அரசியல் நடக்கும். ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் இளைஞனை வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து தேர்தலில் நிற்க வைப்பதுடன் ஜெயிக்க வைக்கின்றனர். அரசியல்பற்றி தெரியாததால் பதவிக்கு வந்தும் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான் இளைஞன். பதவி மட்டுமே இவனிடம் இருக்க அதிகாரமெல்லாம் வேறு சிலரிடம் இருக்கிறது. இதனால் தனது காதலி உள்பட எல்லாவற்றையும் இழக்கிறான் இளைஞன். அதன்பிறகு அவன் எடுக்கும் முடிவுதான் கதை.
அரசியல் கதை என்றாலும் தாம் தூம் என்று பில்டப் காட்சிகள் இருக்காது. யதார்த்தமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹீரோ ஸ்ரீதர், ஹீரோயின் தமலி. வில்லனாக லியாகத் அலிகான், தண்டபாணி நடிக்கின்றனர். ஆர்.சுந்தர்ராஜன், கஞ்சா கருப்பு, உமாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுரேஷ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு. எஸ்ஆர்.பிரசாத் இசை. கோவை தண்டபாணி, இரா.சக்தி வேல், கேஎம்கே தயாரிப்பு.