பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 15 வீரர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்தது. அலங்காநல்லூரில் காளைகள், பார்வையாளர்கள் மத்தியில் பாயாமல் இருக்கவும், பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைவதை தடுக்கவும், 8 அடி உயரத்தில் இரண்டு அடுக்கு தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். வீரர்கள் பிடியில் இருந்து தப்பிச் செல்லும் காளைகள், மீண்டும் வாடிவாசல் பக்கம் செல்லாமல் இருக்க போலீசார் கயிறுடன் நிறுத்தப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 400 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 530 மாடுபிடி வீரர்கள் வெள்ளை பனியன், மஞ்சள் டிரவுசர் அணிந்து களமிறங்கினர். காலை 6 மணி முதல் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக மது, போதை, கொம்பு மருந்து உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. தகுதியில்லாத 10க்கும் அதிகமான வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஜல்லிக்கட்டில் ஆடுகளத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வகையில் தேங்காய் நார் பரப்பப்பட்டது. முன்னதாக முனியாண்டி சுவாமி மற்றும் முத்தாலம்மன் கோயில்களில் மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்களுடன் கிராமக் கமிட்டியினர் ஊர்வலமாக வாடிவாசலுக்கு வந்தனர்.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முன்னிலையில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா காலை 7.47 மணிக்கு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதல் காளையாக முனியாண்டி சுவாமி கோயில் காளையும், அதைத் தொடர்ந்து வலசை உள்ளிட்ட கிராமத்து கோயில் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாகப் பிடித்து அடக்க முயன்றனர். ஆனால், காளைகள் முட்டி தூக்கியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர். இதில் வயிற்றில் குத்து காயம்பட்ட உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி (23), வெங்கடேஷ் (22) இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பார்வையாளர்கள் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிடிபடாத காளைகளுக்கும், பிடித்த வீரர்களுக்கும் தங்க நாணயம், பீரோ, கட்டில் போன்ற பல்வேறு பரிசுகள் உடனடியாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை காண பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களுக்கு தனி காலரி அமைக்கப்பட்டிருந்தது. திடலின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காலரிகளில் அமர்ந்து ஜல்லிக்கட்டை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்து, விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டனர். அவர்களுக்கும் தனி காலரி அமைத்து கொடுக்கப்பட்டது.
எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்து 300க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர். 25க்கும் அதிகமான ஆம்புலன்சுகள் மற்றும் 20க்கும் அதிகமான டாக்டர்கள் தயாராக இருந்தனர். நீதிமன்ற விதிமுறைகளின்படி, பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடந்ததால், வீரர்களுக்குபெரிய அளவில் பாதிப்பு இல்லை.