ஒரே மேடையில் கைகோர்த்த கார்த்திக் மகன், ராதா மகள்
ஐதராபாத்: 2 வருட தலைமறைவுக்கு பிறகு கார்த்திக் மகன், ராதா மகள் ஒரே மேடையில் கைகோர்த்தனர். பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லைÕ படத்தில் அறிமுகமானவர்கள் கார்த்திக்ராதா. பலத்த வரவேற்பு பெற்றனர். பல படங்களில் ஜோடியாக நடித்தனர். இவர்களின் வாரிசுகள் இப்போது திரையுலகுக்கு வந்துள்ளனர். கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி இருவரும் ‘கடல்‘ படம் மூலம் அறிமுகமாகின்றனர். மணிரத்னம் இயக்குகிறார். இருவரையும் தனது படத்துக்கு இயக்குனர் ஒப்பந்தம் செய்தபிறகு,‘ஷூட்டிங் தவிர பொது இடங்களில் நடக்கும் விழாக்களில் இருவரும் பங்கேற்ககூடாது‘ என்று இயக்குனர் மணிரத்னம் நிபந்தனை விதித்தார். இதையடுத்து கடந்த 2 வருடமாக இருவருமே தலைமறைவாகவே இருந்தனர்.
ஷூட்டிங் முடிந்த நிலையில் இருவரின் புகைப்படங்களும் ‘கடல்‘ பட விளம்பரங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கேசட் வெளியீடு ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த மேடையில்தான் கவுதம், துளசி இருவரும் வெளிப்படையாக அறிமுகப்படுத்தப்பட்டனர். கார்த்திக் தனது மகனையும், ராதா தனது மகளையும் அறிமுகப்படுத்தினர். அப்போது இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கவுதம்துளசி இருவரும் கைகோர்த்தபடி மேடைக்கு வந்தனர். படத்தில் நடித்திருக்கும் அர்ஜுன், அரவிந்த்சாமி, லட்சுமி மன்ச்சூ, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். தெலுங்கில இப்படத்துக்கு ‘கடலி‘ என பெயரிடப்பட்டுள்ளது.