கோவை: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ‘ஸ்கை எஸ்டேட்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சிறப்பு செயலர் கூறினார். கோவை பீளமேடு கொடிசியா தொழில்காட்சி வளாகத்தில் இந்திய சாலை குழும தேசிய மாநாடு கடந்த 7ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக சிறப்பு செயலர் கந்தசாமி கூறியதாவது: இந்திய ரோடுகளில் விபத்து தவிர்க்க மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முதன்மை செயல் திட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மலைப்பகுதியில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க மலைப்பகுதியில் ரோட்டோர பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கவேண்டும்.
பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் ரோடுகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரோடுகளில் நடைபாதை அமைத்தல், ரோட்டில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மின் விளக்குகள் அமைத்தல், ஒளிரும் கருப்பு வெள்ளை பூச்சு அமைத்தல் போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மேம்பால திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் உள்பகுதி, வெளிப்பகுதியில் காலியிடங்கள் வீணாக இருக்கின்றன. இந்த இடத்தை மதிப்பு மிக்க இடமாக மாற்ற வணிக வளாகம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், அடுக்குமாடி குடியிருப்பாக கட்டி பயன்படுத்தலாம். போக்குவரத்து மேம்பாலம், ரோட்டிற்கு இடையே காலி இடங்கள் ‘ஸ்கை எஸ்டேட்’ என அழைக்கப்படுகிறது. சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ‘ஸ்கை எஸ்டேட்’ திட்டம் செயல்படுத்தப்படும். கோவை, சேலத்தில் ‘ஸ்கை வாக்’ திட்டம் அமலாக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு செயலர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook