கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி பகுதியில் மஞ்சள் அமோக விளைச்சல் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர். மங்கல பொருளான மஞ்சள் பண்டிகை, திருமண வைபவங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச நாட்களில் புத்தாடை அணியும்போது அதில் மஞ்சள் தடவி ஆடைகளை உடுத்துவார்கள். பொங்கல் பண்டிகையின் போது வீடுகளில் மஞ்சள் தோரணங்களை கட்டி பொங்கல் வைத்து மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் தேவை அதிகமாக உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். கும்மிடிப்பூண்டி, கல்லூர், கெட்டனமல்லி, பூவலம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டனர். இந்த ஆண்டு பருவ மழை குறைவால் மஞ்சள் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பொங்கலுக்காக விற்பனைக்கு அனுப்ப கடந்த 2 நாட்களாக விவசாயிகள் மஞ்சள் கிழங்குகளை அறுவடை செய்து வருகிறார்கள். ஒரு செடியில் விளைச்சல் ஏற்பட்டுள்ள மஞ்சள் அளவில் பெரியதாக உள்ளது. ஒரு கட்டில் 16 மஞ்சள் செடிகளை வைத்து கட்டி இதை ரூ. 50 ல் இருந்து ரூ. 70 வரை விற்க முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் நேற்று முதல் மஞ்சள் கட்டுகளை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வாகனங்களில் அனுப்பி வருகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொங்கல் பண்டிகையை மங்களகரமாக கொண்டாடும் வகையில் மஞ்சள் கட்டுகளை சிங்கப்பூர், தாய்லாந்து, கோலாலம்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook