ஆந்திராவில் எம்எல்ஏ கைதை கண்டித்து திடீர் போராட்டம் : கல்வீச்சில் 15 பேர் காயம்
ஐதராபாத்: ஆந்திராவில் முஸ்லிம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று ஐதராபாத்தில் சார்மினார் பகுதி அருகே திடீர் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் 6 போலீசார் உள்பட 15 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் எம்ஐஎம் என்ற முஸ்லிம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அக்பருதீன் ஓவாசி கடந்த 8ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பொதுக்கூட்டம் ஒன்றில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று அடிலாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கோர்ட் விசாரித்து, இன்று முதல் 5 நாட்கள் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. எம்எல்ஏ கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஐதராபாத்தில் உள்ள ஜும்மா மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். தொழுகை முடித்து வெளியே வந்த அவர்கள் திடீரென போலீசுக்கு எதிராக கோஷம் இட்டனர். மசூதி அருகே கட்டிடப் பணிக்காக ஏராளமான செங்கல் குவிக்கப்பட்டிருந்தது. இது போராட்டக்காரர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. போலீசாரை நோக்கி சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 போலீசார், இரண்டு நிருபர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த போலீசார் பின்னர் சமாளித்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.