சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் 94 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 248 ஊரக குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, 94 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்துக்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக ரூ.1.62 கோடியே வழங்க வும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், பொன்னமராவதி, திருமயம், அரிமளம், குன்னாண்டார் கோயில், புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1,766 ஊரக குடியிருப்பில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், சிவகங்கை மாவட்டத்தில் எஸ் புதூர், சாக்கோட்டை ஒன்றியத்தை சார்ந்த 125 ஊரக குடியிருப்பில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், திருப்பாய்துறை அருகில் காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு 301 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தவும், வருடாந்திர பராமரிப்புக்கு 10.86 கோடி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 158 ஊரக குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க, திருமூர்த்தி அணையினை ஆதாரமாக கொண்டு ரூ.54.14 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தவும், வருடாந்திர பராமரிப்புக்காக 1.20 கோடி ரூபாய் நிதி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook