கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 4ம் தேதி தேர்வெள்ளோட்டம், 7ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்றிரவு காப்பு கட்டுதல், அம்மன் பூதவாகன காட்சி நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு தலைமை பூசாரி சண்முகம் சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினார். பின்னர், கோயில் வளாகத்தில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு கடந்த 2 நாட்களாக காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குண்டம் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும், பெண்கள் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். கோபி, பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம், வெள்ளாளபாளையம், புதுக்கரைபுதூர், மேவாணி, புதுப்பாளையம், கரட்டூர், நல்லகவுண்டன்பாளையம், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், ஒத்தக்குதிரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை குண்டம் இறங்கி நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். பாதுகாப்பு பணியில் 700க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook