ஒரே பாணி ஒர்க் அவுட் ஆகாது : இயக்குனர் அறிவழகன்
சென்னை: ஒரே பாணியில் படம் எடுத்தால் ஒர்க் அவுட் ஆகாது என்றார் அறிவழகன். ‘ஈரம் படத்தை இயக்கியவர் அறிவழகன். அடுத்து ‘வல்லினம்’ படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சஸ்பென்ஸுடன் கூடிய ஆவி கதையாக ஈரம் படத்தை இயக்கினேன். அடுத்து வல்லினம் படம் இயக்குகிறேன். கூடைபந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. கூடை பந்து வீரராக நகுல் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு துறுதுறுவென்றிருக்கும் இளைஞர் தேவைப்பட்டார். அதற்கு நகுல் பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். ஹீரோயின் மிருதுலா.
அனுபமா, அதுல் குல்கர்னி மற்றும் நீக்ரோ இளைஞர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்காக கூடைபந்து விளையாட்டு வீரர்கள் தேவைப்பட்டனர். இதற்காக மாநில அளவில் விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களும் இதில் நடிக்கின்றனர். பாஸ்கர் ஒளிப்பதிவு. தமன் இசை. இப்படத்துக்காக சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் கூடைபந்து விளையாட்டரங்கம் செட் அமைக்கப்பட்டது. ஈரம் படம் வெற்றிபெற்றதால் அதேபாணியில் ஏன் அடுத்த படம் எடுக்கவில்லை என்கின்றனர். ஒரே பாணியில் படம் இயக்கினால் ஒர்க் அவுட் ஆகாது. எனவேதான் எனது ஒவ்வொரு படத்தையும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதை அம்சமுள்ள படமாக இயக்க விரும்புகிறேன்.